Showing posts with label வைகோ. Show all posts
Showing posts with label வைகோ. Show all posts

Monday, May 30, 2016

வைகோ திராவிட இயக்க தலைவரா?

வைகோ திராவிட இயக்க தலைவரா?

வைகோ???
ரஜினியை நடுநிலைவாதி என்பதும் கமலை நாத்திகவாதி என்பதும் வைகோவை திராவிடக் கட்சி தலைவர் என்பதும் வேறு வேறல்ல. எல்லாமும் அப்பழுக்கற்ற கலப்படமற்ற முகமூடிகள் தான்.
திமுக வின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து தனிகட்சி கண்ட வைகோவின் ஆரம்பம் என்னவோ ஆஹா போட வைப்பது உண்மைதான். ஆனால் அதன்பின் அவர் எடுத்த யூ டர்ன்களெல்லாம் ஊட்டி மலை ரோட்டில் கூட இல்லாத அதிசிய வகைகள் தான்.


பெரியார் மணியம்மை திருமணத்தை சாக்காக வைத்து தனி கட்சி கண்ட அண்ணா, திக வின் கடவுள் மறுப்பு கொள்கையை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என பார்ப்பனர் உட்பட யார் வேண்டுமானாலும் வந்து ஏறிக்கொள்கிற பொதுவண்டியாக மாற்றினார். திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகமாக கண்ட முன்னேற்றம் இது தான்.
கணக்கு வழக்கு ஒழுங்காக காண்பிக்க வில்லை என அங்கிருந்து தனி வண்டி பூட்டிய எம்ஜிஆர் பட்டவர்த்தனமான பக்திரசம் பொங்கும் கட்சியாகவே அதிமுகவை அமைத்தார். கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு எல்லாம் அதிமுக வண்டியின் முன் எலுமிச்சை கட்டி தொங்கவிடப்பட்டு முற்றாக நசுக்கப்பட்டது.
ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்படுவதை கண்டித்து வெளியேறிய வைகோ, திராவிடம் என்பதை கட்சியின் பெயரில் மட்டும் வைத்துக்கொண்டு தமிழ்தேசிய கூடாரத்தில் சங்கமமானார். அவர் கண்ட மறுமலர்ச்சி சாதிய தமிழ்தேசியத்துக்கு பல்லக்கு தூக்குவதாகவே இருந்தது.
திராவிட கட்சிகளால் தான் இந்த நாடு சீரழிந்தது என பொங்கியெழுகிற தமிழ்தேசியவாதிகள் தங்களின் பிரதான எதிரியாக முன்னிலைப்படுத்துவது கருணாநிதியை மட்டும் தான். ஜெ வை கூட திராவிட லிஸ்ட்டில் வேண்டாவெறுப்பாக சேர்த்துக்கொள்கிற அவர்கள் வைகோவை அப்படி ஒருபோதும் எண்ணியதுமில்லை, பேசியதுமில்லை.
கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, பெண் விடுதலை, வர்க்க சமத்துவம் இது எதையும் முன்னிலைப்படுத்தாமல் முழுநேர பிரபாகர துதி பாடி தன்னை கடைந்தெடுத்த ஈழ வியாபாரியாக நிலைநாட்டிக்கொண்டவர் வைகோ. ரோமாபுரியிலே, கிரேக்கத்திலே, ஐரோப்பாவிலே, அமெரிக்காவிலே என்று நீட்டி முழக்க தெரிந்த வைகோவுக்கு உள்ளூர் தமிழகத்திலே ஒடுக்கப்படுகிற தமிழனை பற்றி சிந்திக்கமட்டும் நேரமிருந்ததேயில்லை.
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர் வன்முறைகளுக்குள்ளாகி வரும் சூழலில் வைகோவின் நாக்கு சாதிக்கு எதிராய் எப்போதும் வார்த்தைகளை உதிர்த்ததேயில்லை. தமிழ்தேசியவாதிகள் சாதிய படுகொலைகளை பங்காளி சண்டைகள் என்று அடையாளப்படுத்துவதைப்போல சாதிய வன்முறைகள் அரங்கேறும்போதெல்லாம் ஆதிக்க சாதியின் குரலாகவே ஒலித்தவர் வைகோ.
அத்வானி ரதயாத்திரை மேற்கொண்டு நாடு முழுக்க ரத்த வெள்ளாறு ஓட செய்தபோது, அது குறித்த பாராளுமன்ற விவாதத்தில் ஒரு தேர்ந்த ஆர்எஸ்எஸ் காரரை போல அத்வானியின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தி முழங்கியவர் வைகோ. இந்த பேச்சினை அத்வானியும் வாஜ்பாயும் பாராட்டியதை தான் தனது பேச்சுதிறமைக்கான அங்கீகாரமாக முழங்குவார் மறுமலர்ச்சி திராவிட வைகோ.
ஒவ்வொரு பாராளுமன்ற தேர்தலிலும் ஓரளவேனும் சிந்தித்து தெளிவான முடிவை எடுக்கிற வைகோ, சட்டமன்ற தேர்தல்களில் மட்டும் தெளிவாகவே சிந்தித்து அதிமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே தொடர்ந்து எடுத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திராவிடத்திற்கு குழிவெட்டியவர்கள் அண்ணாவும் எம்ஜிஆரும் என்றால் அதை மண்ணிட்டு மூடிய பெருமை வைகோவுக்கு தான்.

வைகோ ஆதரவு பெரியாரிஸ்டுகளும் (?) ஈழமும்

வைகோ ஆதரவு பெரியாரிஸ்டுகளும் (?) ஈழமும்




வைகோ ஆதரவு பெரியாரிஸ்டுகள் என்ற சொற்பதத்தை படித்ததும் என்னால் நகைக்காமல் இருக்க முடியவில்லை. வைகோ வை எனக்கு பிடிக்கும், பிடிக்காது என்பதல்ல விஷயம். ஆனால் வைகோ பெரியாரிஸ்டுகள், கருணாநிதி பெரியாரிஸ்டுகள், பிரபாகரன் பெரியாரிஸ்டுகள் என்றெல்லாம் பிராண்டட் பெரியாரிஸ்டுகளை பார்க்கும் போது நகைப்பதை தவிர வேறென்ன செய்ய முடியும்?
ஒரு பகுத்தறிவாளனுக்கு மக்கள் பற்றை தவிர, இனம், மொழி, தேசியம் குறித்த பற்றெல்லாம் அறவே கூடாது என்கிறார் பெரியார். இதன் பொருள் பகுத்தறிவாளன் நாட்டைப் பற்றியோ, இனம் , மொழி பற்றியோ கொஞ்சமும் கவலைப்படக்கூடாது என்பதோ அவைகளைப் பற்றி சிந்திக்க கூடாதோ என்பதல்ல. எந்த ஒரு செயலும் மக்களை , மக்கள் நலனை மட்டுமே முன்னிலைப்படுத்தி தான் அமைய வேண்டும் என்பதே.
ஆபாச புராண, இதிகாச கதைகளின் குப்பையாக காணப்படுகிற தமிழ் இலக்கியங்களை கண்டித்த தந்தை பெரியார் தான், மக்கள் எளிதாக பயன்படுத்தும்படி மாபெரும் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை கொண்டு வந்தார். காங்கிரசை மிக கடுமையாக எதிர்த்த பெரியார் தான், காமராஜரை ஆதரிக்கும்படி மக்களிடம் பிரச்சாரம் செய்தார். ஒன்றை எதிர்ப்பதாயினும், ஆதரிப்பதாயினும் மக்கள் நலனை மட்டுமே கண்முன் கொண்டு சிந்தித்தனால் மட்டுமே பெரியாரால் அப்படி செயல்பட முடிந்தது. பகுத்தறிவாளனின் இயல்பும் அழகும் அது தான்.
ஆனால் கடவுள் மறுப்பை மட்டுமே பகுத்தறிவாக, பெரியாரிசமாக முன்னெடுப்பவர்கள் தான் நாளடைவில் ஏதேனும் ஒரு தனிநபர் ஆதரவு நிலையெடுத்து பிராண்டட் பெரியாரிஸ்டுகளாய் உருவெடுக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தங்களை பெரியாரிஸ்டுகளாய் காட்டிக்கொண்டே, பெரியாரியக் கொள்கைகள் நீர்த்துபோகச் செய்யும் வேலையையும் இவர்கள் செவ்வனே செய்கிறார்கள்.
பெரியாரை படித்தவருக்கு அம்பேத்கர் அந்நியமாய் பட நியாயமில்லை. அம்பேத்கரைப் படித்தவருக்கு பெரியார் அந்நியமாய் பட நியாயமில்லை. இருவரது நோக்கமும் கொள்கையும் ஒன்றாகவே இருந்தது. ஆனால் தங்களை பெரியாரிஸ்டுகள் என்று சொல்லிக்கொள்கிற சிலர் திட்டமிட்டே அண்ணல் அம்பேத்கரை புறக்கணிக்கிறார்கள், ஒதுக்கி வைக்கிறார்கள். தங்களை அம்பேத்கரிஸ்டுகள் என்று காட்டிக்கொள்கிற சிலர் , தந்தை பெரியாரை தலித் மக்களின் விரோதி என சித்தரிப்பதில் முனைப்பு காட்டுகிறார்கள்.
பெரியாரையும் அம்பேத்கரையும் ஒருவர் மாற்றி ஒருவர் புறக்கணிக்கிற இவர்கள், பிரபாகரன் என்று சொன்னால் மட்டும் கூட்டாக சேர்ந்து காவடி தூக்க முண்டியடிக்கிறார்கள். கடவுளேயாயினும் கேள்வி கேட்ட பூமியில் கடவுளுக்கும் மேலானவராக பிரபாகரனை உயர்த்தி , எல்லா விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டவராக அவரை காக்க துடிக்கிறார்கள்.



பிரபாகரன் பெயரோடு வாழ்க என்பதை தவிர வேறு எதை சேர்த்து சொன்னாலும் உடனடியாக தமிழின துரோகி பட்டம் கட்டி தங்கள் தமிழினப் பற்றை பறை சாற்றுகிறார்கள். ஆனால் மூச்சுக்கு முன்னூறு முறை இவர்கள் உச்சரிக்கிற தமிழினப் பற்றை அலசிப்பார்த்தால் ஒரே சாதி வெக்கையாக இருக்கிறது.
கடல்கடந்து இருக்கிற இலங்கை நாட்டில் சிங்கள ஆதிக்கவாதிகள் தமிழர்களை கொடுமைப்படுத்தி கொன்று குவிக்கிறார்கள், தமிழீழம் வேண்டும், ஒழிக சிங்கள பவுத்த ஆதிக்கம், வளர்க தமிழ் தேசியம் என்று கூவி தங்கள் இனப்பற்றை காட்ட தெரிந்தவர்களுக்கு இங்கே, இதே நாட்டில், இதே ஊரில், இதே தெருவில் நடக்கிற எதுவும் காதுக்கு எட்டுவதுமில்லை, கண்ணுக்கு புலனாவதுமில்லை.
ஆதிக்க சாதி வெறியர்களின் திட்டமிட்ட வன்முறைகளால் ஆண்டாண்டு காலமாக அடிப்பட்டு மிதிப்பட்டு கிடக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் கண்ணீரோ கூக்குரலோ அவர்களுக்கு அந்நியமாய் படுகிறது. எதுவெல்லாம் ஈழத்தில் நடக்கும் அநீதி என பொங்குகிறார்களோ அவைகளை மிஞ்சிய அநீதிகள் இங்கும் தினந்தோறும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. எவையெல்லாம் ஈழத்திற்கு தேவையோ, அதே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் வேண்டிதான் இங்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். எல்லை தாண்டி நீளும் உங்கள் இரக்கம் மிகுந்த கைகள், எதிரே வீழ்த்தப்படுகிற தாழ்த்தப்பட்டவனைக் கண்டால் மட்டும் முடக்கிக்கொள்கிறது.
தங்களை அம்பேத்கரிஸ்டுகள், தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக குரல் கொடுப்பவர்கள் என்பவர்களும் பிரபாகரனைக் கொண்டாடுவதில் காட்டும் முனைப்பை தந்தை பெரியாரை கொண்டாடுவதில் காட்டுவதில்லை.
ஆதிக்க சாதியினர் பிரபாகரனை, தமிழ் தேசியத்தை கொண்டாடுவதில் லாபமிருக்கிறது. தமிழராக இணையுங்கள் என்று கூவிக்கொண்டே தங்களின் சாதி அக்கிரமங்களை மூடி மறைக்க அல்லது பங்காளி சண்டை என்று அதை நியாயப்படுத்திக்கொள்ள பிரபாகர முகமூடி அவர்களுக்கு பெரிதும் உதவுகிறது.
ஆனால் தன் மண்ணில் சாதிக்க முடியாத சமத்துவத்தை, சுதந்திரத்தை , சகோதரத்துவத்தை ஈழத்தில் மட்டும் சாதித்துவிட முடியுமென முஷ்டி உயர்த்துவது அப்பட்டமான , மக்களை ஏமாற்றும் அயோக்கியத்தனம்.
திமுகவை எதிர்க்கிற தமிழ்தேசியவாதிகள் கூட வைகோவிடம் தங்கள் திராவிட எதிர்ப்பை மூட்டை கட்டி வைத்துவிட்டு வாலை குழைக்க அவரின் ஆதிக்க சாதிக்கு ஆதரவான தமிழ்தேசிய பற்றும் காரணம்.
பிரபாகரன், வைகோ, ஜெயா, கருணாநிதி என எந்த தனிப்பட்ட நபர் ஆதரவு நிலை கொண்டும் பகுத்தறிவாளனாய் இருக்க முடியாது. தனி நபர் துதி மதியை மழுங்கடிக்கிற யுக்தி. பிரபாகரனை கொண்டாடுங்கள், ஆனால் அந்த கொண்டாட்டங்களினால் இங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சிறு துளி நன்மையுமில்லை. ஆனால் தந்தை பெரியாரையும் அண்ணல் அம்பேத்கரையும் ஒரு சேர முன்னெடுப்பது பார்ப்பனியத்திற்கெதிரான மாபெரும் ஆயுதம். நீங்கள் யார் என்பதை பகுத்தறிவின் துணைகொண்டு நீங்களே சிந்தித்து முடிவு செய்யுங்கள்.
- லியோ